Published : 16 Apr 2018 09:41 AM
Last Updated : 16 Apr 2018 09:41 AM

லண்டனில் 16 முதல் 20-ம் தேதி வரை நடக்கும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில்மோடிக்கு மட்டும் சிறப்பான வரவேற்பு

காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரிட்டிஷ் தலைநகர் லண்டன் செல்லும் பிரதமர் மோடிக்கு மட்டும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

காமன்வெல்த் உச்சி மாநாடு இன்று முதல் 20-ம் தேதி வரை லண்டனில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை 17-ம் தேதி லண்டன் செல்கிறார்.

இந்த மாநாட்டில் 52 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் சிறப்பான வரவேற்பு அளிக்க பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டுள்ளது.

காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறும் இடத்துக்கு சொகுசு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் தனியாக லிமோசின் சொகுசு காரில் அழைத்துச் செல்ல பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய, பிரிட்டிஷ் தொழில்நுட்ப ஒத்துழைப்பை உணர்த்தும் வகையில் இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் மின்சார காரில் இளவரசர் சார்லஸ் மாநாட்டுக்கு வருகிறார்.

வரும் 18-ம் தேதி பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மேவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். பிரிட்டிஷ் ராணி எலிசபெத் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கிறார். லண்டனில் இந்திய ஆயுர்வேத மையத்தை அவர் திறந்து வைக்கிறார். பிரிட்டனில் செயல்படும் பசவேஸ்வரா அறக்கட்டளை சார்பில் தேம்ஸ் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பசவண்ணரின் சிலையையும் மோடி திறந்து வைக்கிறார்.

முன்னதாக இன்றும் நாளையும் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்திய-நார்டிக் மாநாடு நடக்க உள்ளது. இதில் மோடி பங்கேற்கிறார். மாநாட்டில்டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

அங்கிருந்தே பிரதமர் மோடி லண்டன் செல்கிறார். வரும் 20-ம் தேதி லண்டனில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் பெர்லினில் அவர் தரையிறங்குகிறார். அப்போது அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x