Published : 15 Apr 2018 08:53 AM
Last Updated : 15 Apr 2018 08:53 AM
அலுவலக ஆவணங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அனைவரையும் ‘தலித்’ என குறிப்பிட வேண்டாம் என மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் 1982 பிப்ரவரி 10-ம் தேதி வெளியிட்ட ஓர் உத்தரவை மேற்கோள் காட்டி, மத்திய சமூக நீதி அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் (எஸ்சி) சாதி சான்றிதழில் ‘ஹரிஜன்’ என்ற வார்த்தையை குறிப்பிட வேண்டாம் என்றும் எஸ்சி பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சாதியின் பெயரை மட்டும் குறிப்பிட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மேலும் அரசியலமைப்பு சட்டத்தில் தலித் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்களை தலித் என குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அரசியல் சட்டத்தின் 341-வது பிரிவின் கீழ் குடியரசுத்தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில் எஸ்சி என மட்டுமே இருக்கிறது. எனவே, அலுவலக ரீதியாக நடைபெறும் கடித பரிமாற்றம், ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்திலும், தாழ்த்தப்பட்ட பிரிவினரை எஸ்சி என ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிட வேண்டும். தலித் என குறிப்பிடக் கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT