Published : 07 Apr 2018 07:59 AM
Last Updated : 07 Apr 2018 07:59 AM

கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து தெலங்கானாவில் 9 தொழிலாளர்கள் பலி

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் நேற்று காலை விவசாய கூலி பணிக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டர், கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

நல்கொண்டா மாவட்டம், வத்திபட்லா பகுதியிலிருந்து புலிசெர்லா பகுதியில் உள்ள மிளகாய் தோட்டத்தில் கூலி வேலை செய்ய நேற்று காலை சுமார் 30 தொழிலாளர்கள் ஒரு டிராக்டரில் சென்றுகொண்டிருந்தனர். வத்திபட்லாவில் ஒரு இடத்தில் சாலையின் வளைவில் டிராக்டர் வேகமாக சென்றபோது, கால்வாயில் கூலித் தொழிலாளிகளுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், தேவரகொண்டா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீஸார், தீயணைப்பு படையினர், பொதுமக்கள் ஆகியோர் தண்ணீரில் உயிருக்கு போராடிய 19 பேரை காப்பாற்றினர். இதில் 15 பேர் காயமடைந்திருந்தனர். இவர்கள் தேவரகொண்டா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள 2 பேரை காணவில்லை. இவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாமென அஞ்சப்படுகிறது. இவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கிரேனின் உதவியால், தண்ணீருக்குள் விழுந்த டிராக்டரை மீட்டனர். இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக தேவரகொண்டா போலீஸார் கூறினர். டிராக்டர் ஓட்டுனர் தூக்கத்தில் டிராக்டரை ஓட்டியதால்தான் இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x