Published : 18 Mar 2018 07:24 AM
Last Updated : 18 Mar 2018 07:24 AM
ஜம்மு-காஷ்மீரை பாதுகாப்பதற்காக, எந்த நாட்டின் எல்லையைத் தாண்டிச் சென்று தாக்கவும் இந்திய ராணுவம் தயங்காது என்று பாகிஸ்தானுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு தனியார் தொலைக்காட்சி சார்பிலான கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்தியா அமைதியை விரும்பும் நாடாகவே என்றும் திகழ்ந்து வருகிறது. அண்டை நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நட்புறவையும், இணக்கமான உறவையும் பேணவே இந்தியா விரும்புகிறது. அதேசமயத்தில், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதற்கு கடுமையான பதிலடிகொடுக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்.
அண்டை நாடான பாகிஸ்தானுடனும் சுமூகமான உறவை வைத்துக் கொள்வதே இந்தியாவின் விருப்பமாகும். ஆனால், அதற்கு அந்நாடு தீவிரவாதத்துக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அண்மைக்காலமாக பாகிஸ்தானின் செயல்பாடுகள் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளன. ஐ.நா. அமைப்பால் தடை செய்யப்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீதின் அரசியல் கட்சிக்கு அந்நாடு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோபத்துக்கு பாகிஸ்தான் ஆளாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் என்பது என்றைக்குமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். ஜம்மு-காஷ்மீரை இந்தியாவிலிருந்து யாரேனும் பிரிக்க நினைத்தால், அதனை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. காஷ்மீரை பாதுகாக்க, எல்லையைத் தாண்டிச் சென்று தாக்கவும் இந்திய ராணுவம் தயங்காது.
அதேபோல், ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதத்தின் பாதைக்கு அழைத்துச் செல்லவும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. யாருடன் பேசவும் இந்தியா தயார். காஷ்மீர் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு நடத்த முன்னாள் உளவுப்பிரிவுத் தலைவர் தினேஷ்வர் சர்மாவை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் அனைத்து பிரிவினருடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
எனவே, இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT