Published : 17 Mar 2018 08:27 AM
Last Updated : 17 Mar 2018 08:27 AM
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடை பெறுவதால் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லியின் பெயரில் நேற்று முன் தினம் இரவு ட்விட்டரில் ஒரு பதிவு வெளியானது.
அதில், 'கர்நாடக சட்டப் பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுகிறது. யாருக்கு சீட் வழங்குவது என்பதை பொதுப்பணித்துறை அமைச்சரும் (மகாதேவ பிரசாத்), சாலை ஒப்பந்ததாரர்களும் தீர்மானிப்பதை ஏற்க முடியாது. காங்கிரஸ் தலைமை இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்திலும் 'டேக்' செய்யப்பட்டிருந்தது. வீரப்ப மொய்லியின் பெயரில் இந்த பதிவு வெளியான சிறிது நேரத்தில் அவரது மகன் ஹர்ஷா மொய்லியும் இதே தகவலை ட்விட்டரில் பகிர்ந்தார். காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு நடந்துவரும் நிலையில், வீரப்ப மொய்லியின் பெயரில் வெளியான ட்விட்டர் பதிவால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வீரப்ப மொய்லி, ‘‘எனக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமே இல்லை. கட்சி விவகாரங்களை பொதுத் தளத்தில் ஒருபோதும் எழுத மாட்டேன்'' என மறுத்தார். அவரது மகன் ஹர்ஷா மொய்லியும் ட்விட்டர் பதிவை மறுத்தார். அதன்பின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுகள் நீக்கப்பட்டன. இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் மேலிடத் தலைவர் வேணுகோபால் கூறுகையில், ‘‘இதுபற்றி காங்கிரஸ் சார்பில் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT