Last Updated : 14 Mar, 2018 07:38 PM

 

Published : 14 Mar 2018 07:38 PM
Last Updated : 14 Mar 2018 07:38 PM

இலங்கை அரசின் புதிய சட்டத்தில் இருந்து தமிழக மீனவர்களை காக்க வேண்டும்: மக்களவையில் அன்வர் ராஜா வலியுறுத்தல்

இலங்கை அரசின் புதிய மீன்பிடிச் சட்டத்தில் இருந்து தமிழக மீனவர்களை காக்க வேண்டும் என மக்களவையில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா கேட்டுக் கொண்டார். இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாக தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தினார்.

இது குறித்து இன்று மக்களவையில் ராமநாதபுரம் எம்.பி.யான அன்வர் ராஜா விதி 377-ன் கீழ் பேசியதாவது:

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதும், அவர்கள் படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்வதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம் என்பதுடன் கடுமையான தண்டனை அளிக்க வகை செய்யும் விதத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு கொடிய சட்டம் நிறைவேறி உள்ளது. கடந்த ஜனவரி 28-ல் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தில் மீனவர்கள் தம் அபராதத்தை ஒரு மாத காலத்தில் செலுத்தவில்லை எனில் பறிமுதல் செய்யப்பட்டவை குறித்து கடுமையான முடிவு எடுக்கலாம்.

இதன்மூலம், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் பாதிக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரமே உலைவைக்கப்படும் நோக்கம் உள்ளது. இக்கொடிய சட்டம் தமிழக மீனவர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவர்கள் மீன்பிடித்தலை விடுத்து வேறு தொழில் வேற்றிடம் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் இருந்து தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் கடந்த ஜனவரி 26-ல் கடிதம் எழுதி அதன் கொடிய நிலை மீது கருத்துகள் தெரிவித்திருந்தார். இதன் மீது வெளியுறவுத்துறை மற்றும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தி இருந்தார். இந்த புதிய சட்டத்தின் வாயிலாக தமிழக மீனவர்கள் நீண்ட காலச்சிறை, பெருந்தொகை அபராதம் விதிக்கவும் முடியும் என்பதால் அவர்கள் துயரம் பன்மடங்காகும்.

தமிழக மீனவர்களின் துயரங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என இந்தியா இலங்கை கூட்டமைப்பு எத்தினிக்கும் வேளையில் இலங்கை அரசு ஒரு கொடுஞ்சட்டம் இயற்றியது துரதிஷ்டவசமானது. இதன் பிடியில் இருந்து தமிழக மீனவர்களை காத்திட இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அன்வர் ராஜா தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x