Published : 14 Mar 2018 04:13 PM
Last Updated : 14 Mar 2018 04:13 PM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தனக்கு 1999-ம் ஆண்டு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கடந்த 1991-ம் ஆண்டு, மே 21-ம்தேதி ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகத்தின் சிறீபெரும்புதூருக்கு வந்திருந்தபோது, மனிதவெடிகுண்டால் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், இரண்டு 9 ஓல்ட் பேட்டரிகள் வாங்கிக்கொடுத்ததாக குற்றம் சாட்டி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். இவருக்கு 1998-ம் ஆண்டு மே 11-ம்தேதி தூக்கு தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் தூக்கு தண்டணையை ஆயுள் தண்டனையாக கடந்த 2014-ம்ஆண்டு குறைத்தது.
இதற்கிடையே கடந்த 1999-ம் ஆண்டு தனக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இதற்கு சிபிஐ தரப்பில் பன்முக ஒழுங்கு காண்காணிப்பு அமைப்பு (எம்டிஎம்ஏ) பதில் மனுத் தாக்கல் செய்தது. அதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மிகப் பெரிய சதிநடந்துள்ளதன் பின்னணியில் பேரறிவாளனுக்கும் பங்குள்ளது. ஆதலால் அவரை விடுவிக்கவும், தண்டனையை நிறுத்திவைக்கவும் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர் பானுமதி, எம். சந்தானகவுடர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், கடந்த 1999-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அளித்த தீர்ப்பில் எந்தவிதமான தலையீடும் செய்யத் தேவையில்லை. இதில் சிபிஐயின் பன்முக ஒழுங்கு காண்காணிப்பு அமைப்பு தனது பதிலை அடுத்த 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT