Published : 14 Mar 2018 12:27 PM
Last Updated : 14 Mar 2018 12:27 PM

மக்களவை இடைத்தேர்தலில் கடும் போட்டி: யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூரில் சமாஜ்வாதி முன்னிலை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை இடைத்தேர்தலில் பாஜகவுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் எம்.பியாக இருந்த கோரக்பூரில் சமாஜ்வாதி முன்னிலை பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். எனவே காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதே போன்று பிஹார் மாநிலத்தில் உள்ள அரேரியா மக்களவை தொகுதிக்கும் ஜகனாபாத், பபுவா ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கோரக்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் உபேந்திர சுக்லா தொடக்கத்தில் முன்னிலை பெற்றார். எனினும் தற்போது அங்கு சமாஜ்வாதி முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொகுதியில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் நீண்டகாலம் எம்.பியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பூல்பூர் தொகுயில் சமாஜ்வாதி கட்சியின் நாகேந்திர பிரதாப் சிங் படேல் 8 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

பிஹாரில் அரேரியா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரதீப் சிங் முன்னிலை பெற்றுள்ளார். இதுபோலவே, பபுவா சட்டப்பேரவை தொகுதியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம் ஜகனாபாத்தில் எதிர்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதளம் முன்னிலை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x