Published : 14 Mar 2018 09:32 AM
Last Updated : 14 Mar 2018 09:32 AM
கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் காச (டிபி) நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2025-க்குள் காச நோய் ஒழிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) ஆகியவை சார்பில் காச நோய் தொடர்பான உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, காச நோய் இல்லா இந்தியா என்ற பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். 2025-க்குள் இந்த நோயை ஒழிப்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம் ஆகும். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய தாவது:
சர்வதேச அளவில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் டிபி நோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காச நோயை ஒழிப்பது தொடர்பான சர்வதேச நாடுகளின் முயற்சி வெற்றி பெற வில்லை. எனவே, இந்த இலக்கை அடைய அணுகுமுறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம்.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, அதாவது 2025-க்குள் இந்தியாவிலிருந்து காச நோயை விரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான திட்டம் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
டிபி நோயை ஒழிக்கும் இந்த முயற்சிக்கு மாநில அரசுகள் முக்கிய பங்காற்ற வேண்டும். எனவே இந்த பிரச்சார இயக்கத்தில் இணையுமாறு அனைத்து தலைமைச் முதல்வர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் இத்துறை சார்ந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களும் டிபியை ஒழிக்கும் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
நாட்டில் பரவலாக இருக்கும் தொற்று நோய்களில் மிகவும் முக்கியமானது டிபி. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த நோயை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களுடைய வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடையது ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் 1 கோடி பேர் டிபி நோயால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2016-ல் மட்டும் டியூபர்குளோசிஸ் (டிபி) நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT