Published : 14 Mar 2018 09:28 AM
Last Updated : 14 Mar 2018 09:28 AM
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சோனியா காந்தி டெல்லியில் நேற்று இரவு விருந்து அளித்தார். இதில் 20 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
சுமார் 19 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த சோனியா காந்தி கடந்த டிசம்பரில் பதவி விலகினார். அவரது மகன் ராகுல் காந்தி தலைவர் பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார். அரசியலில் இருந்து சோனியா ஒதுங்கியிருப்பதாக கருதப்பட்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு டெல்லியில் நேற்று அவர் இரவு விருந்து அளித்தார்.
இதில் சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் தளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பகுஜன் சமாஜ், கேரள காங்கிரஸ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, இந்துஸ்தான் டிரைபல் கட்சி, திரிணமூல் காங்கிரஸ், இந்துஸ்தான் ஆலம் மோர்ச்சா, பாரதிய டிரைபல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
திமுக சார்பில் கனிமொழி எம்.பி., ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், திரிணமூல் சார்பில் சுதீப் பண்டோபாத்யா, சமாஜ்வாதி சார்பில் ராம் கோபால் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் ஒமர் அப்துல்லா மற்றும் சரத் யாதவ்உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திர சேகர ராவ், பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் மத்திய அரசில் இருந்து வெளியேறினாலும் பாஜக கூட்டணியில் இருந்து இன்னமும் வெளியேறவில்லை. பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக், காங்கிரஸை கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனால் அந்த 3 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வரும் 2019-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சோனியா கலந்துரையாடியுள்ளார். இதில் மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT