Published : 14 Mar 2018 09:23 AM
Last Updated : 14 Mar 2018 09:23 AM
நாகாலாந்து சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நெபியு ரியோ தலைமையிலான புதிய அரசு வெற்றி பெற்றது.
மொத்தம் 60 உறுப்பினர்களை கொண்ட நாகாலாந்து சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த நாகா மக்கள் முன்னணி (என்பிஎப்) 27 தொகுதிகளைக் கைப்பற்றியது. என்டிபிபி - பாஜக கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி கண்டது. இதில், என்டிபிபி 18 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எனினும், எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தின் ஓர் எம்எல்ஏ மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ஒருவரின் ஆதரவுடன் என்டிபிபி கட்சித் தலைவர் நெபியு ரியோ, நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், நாகாலாந்து சட்டப்பேரவையில் புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில், 33 எம்எல்ஏக்கள், முதல்வர் நெபியு ரியோ தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அரசுக்கு எதிராக 26 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து, பெரும்பான்மை பலத்துடன் நெபியு ரியோ தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நாகாலாந்து சட்டப்பேரவைத் தலைவராக என்டிபிபி கட்சி மூத்த தலைவர் விகோ ஓ யோஷுவை ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT