Published : 14 Mar 2018 09:22 AM
Last Updated : 14 Mar 2018 09:22 AM

கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு: சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு குறித்து சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், நீதிமன்ற அனுமதியின் பேரில் கடந்த 1-ம் தேதி முதல் 12 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரித்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.பி.கார்க் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

கார்த்தி சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அப்போது அவர், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுவிட்டதாகத் தெரிவித்தார். கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு குறித்து வரும் 16-ம் தேதி சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி எஸ்.பி.கார்க் உத்தரவிட்டார்.

கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரம், தாயார் நளினி ஆகியோர் நீதிமன்ற மாடத்தில் இருந்து விசாரணையை கண்காணித்தனர். முன்னதாக நீதிபதி இந்தர்மீட் கவுர் முன்பாக ஜாமீன் மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் வழக்கில் இருந்து விலகியதால் நீதிபதி எஸ்.பி. கார்க் ஜாமீன் மனுவை விசாரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x