Published : 13 Mar 2018 01:03 PM
Last Updated : 13 Mar 2018 01:03 PM
நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தனித்தனியாக விமானங்கள் வரும் 2020ம் ஆண்டுக்குள் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் ஆகியோரின் வெளிநாடு, உள்நாட்டு பயணத்துக்காக இரு போயிங் 77-300 இஆர் விமானங்கள் சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியது. இந்த விமானத்தில் விஐபிக்கள் ஓய்வு அறை, பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் அறை, மருத்துவ சிகிச்சை அளிக்கும் அறை போன்றவை இடம் பெற உள்ளன. மேலும், விமானத்தில் வைபை வசதி, எந்தவிதமான ஆயுதங்களாலும் தாக்கமுடியாத அளவுக்கு பாதுகாப்பு உள்ளிட்டவசதிகள் இடம் பெற்று உள்ளன.
பிரதமர், குடியரசு தலைவர் இதற்கு முன்பயன்படுத்திய போயிங் 747 விமானம் போல் இல்லாமல், 777 போயிங் விமானம் மிகவும் நவீனமானது. இந்த விமானம் எந்தவிதமான இடையூறுமின்றி டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு இடைநிற்காமல் பறக்க முடியும். அதற்கேற்றார்போல் எரிபொருள் நிரப்பும் வசதி இதில் உண்டு.
இந்த வகையான விமானங்கள் விரைவில் மத்திய அரசு சொந்தமாக வாங்கி, விவிஐபிக்களின் பயன்பாட்டுக்காக மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த வகையான விமானங்களை ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு வாங்க உள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வகையான விமானத்தில் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர், ஆகியோர் மட்டுமே பயணிக்க முடியும். இந்த விமானங்களை வாங்குவதற்காக அடுத்த நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 469 கோடி ஒதுக்கி உள்ளது.
இந்த விமானங்கள் குறித்த அறிந்த அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘ போயிங் விமானம் மிகவும் விலைமதிப்பானது, அந்த விமானத்தை வாங்கியபின், தனித்தனி சிறப்பு வசதிகளை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். இந்த விமானங்களை இயக்குவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற 44 பைலட்கள் தயார் செய்யப்படுகிறார்கள். அதில் 4 பேர் எப்போதுமே மாற்று பைலட்களாக செயல்படுவார்கள்’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT