Published : 13 Mar 2018 09:34 AM
Last Updated : 13 Mar 2018 09:34 AM

கங்கையில் பிரதமர் மோடியுடன் பயணம் செய்த பிரான்ஸ் அதிபர்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், கங்கை நதியில் படகில் பயணம் செய்தார்.

பிரான்ஸ் அதிபர் இமானு வேல் மக்ரோன் 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு கடந்த 9-ம் தேதி வருகை தந்தார். அவருடன் அவரது மனைவி பிரிஜித் மற்றும் அமைச்சர்கள் சிலரும் உடன் வந்திருந்தனர். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து, இரு நாட்டு விவகாரங்கள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியா - பிரான்ஸ் இடையே கடல் பாதுகாப்பு, அணு ஆயுதம், பொருளாதாரம், சூரிய மின்சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக 14 ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின.

இதனைத் தொடர்ந்து, உத்தரபிரதேசத்துக்கு நேற்று முன்தினம் தமது மனைவியுடன் வருகை தந்த இமானுவேல் மக்ரோன், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டார். பின்னர் அவர்கள் டெல்லி திரும்பினர். இந்நிலையில், உத்தரபிர தேச மாநிலம் வாரணாசிக்கு இமானுவேல் மக்ரோன் தனி விமானம் மூலமாக நேற்று வந்தார். பின்னர், பிரதமர் மோடியும், மக்ரோனும் ஹெலிகாப்டர் மூலமாக மிர்சாபூர் சென்றடைந்தனர். இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த சூரிய மின்சக்தி நிலையத்தை தொடங்கி வைத்தனர்.

அதன்பிறகு, மீண்டும் வாரணாசிக்கு வந்த அவர்கள், நீராவி இன்ஜின் படகு மூலமாக கங்கையில் பயணம் செய்தனர். அங்கு அஸ்ஸி காட்டிலிருந்து தஸ்அஸ்வமேத் காட் வரையில் சுமார் 500 மீட்டர் அவர்கள் படகில் பயணித்தனர். இந்தப் படகு சவாரியின்போது, தீனதயாள் வர்த்தக மற்றும் கலாச்சார மையத்தை அவர்கள் பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x