Published : 12 Mar 2018 05:39 PM
Last Updated : 12 Mar 2018 05:39 PM
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குறுதி அளித்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து நாசிக்கில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பை நோக்கி பிரம்மாண்ட பேரணி தொடங்கினர்.
இதில் 35 ஆயித்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணமாக மும்பையை நோக்கிப் புறப்பட்டனர். இந்தப் பேரணியை அகில இந்திய கிஸான் சபா (ஏஐகேஎஸ்) ஏற்பாடு செய்திருந்தது. இதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாசிக்கில் இருந்து புறப்பட்ட பிரம்மாண்ட விவசாய பேரணி ஞாயிற்றுக்கிழமை மும்பை வந்தடைந்தது. நள்ளிரவிலும் மக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படாத வண்ணம் விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர். சுமார் 6 நாட்களாக 180 கிலோ மீட்டர் நடந்தி மும்பை நோக்கி வந்த விவசாயிகளை அந்நகர மக்கள் நள்ளிரவில் உணவுப் பொருட்கள், தண்ணீர் கொடுத்து அன்புடன் வரவேற்றனர். மேலும் ஆங்காங்கே மருத்துவர்களும் நெடும் தூரம் நடந்து வந்தததில் அயர்ந்திருந்த விவசாயிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தன.
சாலைகளில் இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என்று எந்த வேறுபாடில்லாமல் மக்கள் சாலைகளில் காத்திருந்து விவசாயிகளுக்கு மலர்கள் கொடுத்து பேரணியில் கலந்து கொண்ட உணர்வுப்பூர்வமான காட்சிகள் அடங்கிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
விவசாயிகளின் போராட்டம் குறித்து பொறியாளர் ருசித்தா மித்ரா கூறும்போது, "அவர்களின் பிரச்சினை உண்மையில்லை என்றால்?...இந்த வெப்பத்தில் யார் நடந்து வருவார்கள். விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லாத நாடு நிச்சயமாக வளர்ச்சியடையாது" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT