Published : 12 Mar 2018 04:43 PM
Last Updated : 12 Mar 2018 04:43 PM
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்குகள் எந்த நிலையில் இருக்கின்றன, அவை விசாரிக்கப்படுகிறதா அதில் ஏற்பட்ட முன்னேற்றம் என்பது குறித்து தனியார் தொண்டுநிறுவன அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்து இருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீண்ட காலமாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்குகள், ஏர்செல் மேக்சிஸ் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீண்ட காலமாக நடந்து வருகின்றது. ஆனால், இதுபோன்ற மிகவும் உணர்வுபூர்வமான வழக்கில் இந்த நாட்டு மக்களை இன்னும் இருட்டில் வைத்திருக்க முடியாது.
இன்னும் இரு வாரங்களுக்குள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்குகள், ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளின் நிலை குறித்து அறிக்கையாக நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும்.
கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் அரசு சார்பாக சிறப்பு வழக்கறிஞராக ஆனந்த் குரோவர் இருந்து வந்தார். அவரை நாங்கள் விடுவிக்கிறோம். அதற்கு பதிலாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை நியமிக்கிறோம். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் ஆணையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT