Published : 11 Mar 2018 11:04 AM
Last Updated : 11 Mar 2018 11:04 AM
அணுசக்தி, பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, கல்வி உட்பட 14 துறைகளில் இந்தியாவும் பிரான்ஸும் ஒப்பந்தம் மேற்கொண்டன. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் - பிரதமர் மோடி முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் நேற்றுமுன்தினம் இரவு டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை பிரதமர் மோடி வரவேற்றார். அதிபர் மெக்ரான் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அதிபர் மெக்ரானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மெக்ரானை பிரதமர் மோடி வரவேற்று அழைத்து சென்றார். பின்னர் இருவரும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள், இந்திய - பிரான்ஸ் உறவு குறித்த முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
பின்னர் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், 14 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அணுசக்தி, பாதுகாப்பு, ரகசிய தகவல்கள் பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, கல்வி, சுற்றுச்சூழல், நகர்ப்புற மேம்பாடு, ரயில்வே உட்பட 14 துறைகளில் இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. பின்னர் பிரதமர் மோடி, அதிபர் மெக்ரான் இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, ‘‘இரு நாடுகளுக்கு இடையில் ராணுவம், பாதுகாப்பு விஷயத்தில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும்’’ என்று இருவரும் தெரிவித்தனர். மெக்ரான் கூறும்போது, ‘‘தீவிரவாத, மதவாத அச்சுறுத்தல்களை ஒடுக்க இந்தியா - பிரான்ஸ் நாடுகள் முழு முனைப்புடன் செயலாற்றும். அதற்காக ராணுவ துறையில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு புதிய கட்டத்தை எட்டியுள்ளது’’ என்றார்.
இந்தச் சந்திப்பின் போது மோடியும் மெக்ரானும் இந்திய பசிபிக் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT