Published : 09 Mar 2018 11:26 AM
Last Updated : 09 Mar 2018 11:26 AM

ஆர்எஸ்எஸ் அமைப்பில் மாற்றம்: மோடிக்கு நெருக்கமான தத்தாத்ரேயாவுக்கு பொதுச்செயலாளர் பதவி?

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிக முக்கியமான மூன்று நாள் பொதுக்குழுக் கூட்டம் நாக்பூரில் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்எஸ்எஸ்சின் அகில பாரத பிரதிநிதி சபா என அழைக்கப்படும். மூன்று நாள் பொதுக்குழுக்கூட்டம் அந்த அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் இன்று தொடங்குகிறது. இதில் 1,500 நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ஆர்எஸ்எஸ் தலைவருக்கு தேர்தல் நடைபெறுவதில்லை. தற்போதைய தலைவர் எதிர்கால தலைவரை தேர்ந்தெடுத்து, பின்னர் கட்சியின் பொதுக்குழு அதற்கு அங்கீகாரம் அளிக்கும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் தலைவர் பதவிக்கு பிறகு அதிக அதிகாரம் கொண்ட, அமைப்பின் அன்றாட நிர்வாக பணிகளை கவனிக்கும் உயர் பதவியாக பொதுச்செயலாளர் பதவி கருதப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும். பொதுக்குழுவில்தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த ஆண்டு பொதுச்செயலாளர் தேர்வு நடைபெற வேண்டும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளராக தற்போது பதவி வகித்து வரும் பையாஜி ஜோஷி எனப்பும் சுரேஷ் ஜோஷி உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பதவி விலகும் போது வேறு ஒருவர் அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவார். ஆர்எஸ்எஸ்சின் துணைப் பொதுச்செயலாளரான தத்தாத்ரேயா ஹூசபளே பொதுச்செயலாளராக தேர்வாக கூடும் என தெரிகிறது.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த தத்தாத்ரேயா அரசியல் விவகாரங்களில் சற்று கூடுதல் கவனம் செலுத்தக்கூடியவர். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு நெருக்கமானவர். எனவே 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் ஆர்எஸ்எஸ்சின் உயர் பொறுப்புக்கு வரக்கூடம் என தெரிகிறது.

இதன் மூலம் அரசியல் மற்றும் தேர்தல் சமயத்தில் பாஜக - ஆர்எஸ்எஸ் இடையே ஒருங்கிணைப்பு அதிகரிக்க கூடும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் நடைமுறை

ஆர்எஸ்எஸ் தேர்தல் நடைமுறைபடி தற்போதைய பொதுச்செயலாளர் பதவி விலகுவார். அதற்கு பதிலாக பிரதிநிதிகளிடம் இருந்து தேர்தல் பொறுப்பாளர் வேட்புமனுக்களை பெறுவார். பிரதிநிதி முன்மொழியும் பெயரை மேலும் மூன்று பிரதிநிதிகள் வழிமொழிய வேண்டும். முன் மொழியப்படும் வேறு நபர்கள் இருந்தால் தேர்தல் நடைபெறும். இல்லையெனில் அவர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார். ஆர்எஸ்எஸ் நடைமுறைபடி பெரும்பாலும் போட்டி இருப்பதில்லை.

இதுபோலவே துணைப் பொதுச்செயலாளர் உட்பட 20 பேர் கொண்ட நிர்வாகிகள் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவர்.

இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி சங்க பரிவார் எனப்படும் பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதிய மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட அதன் துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பாஜக தலைவர் அமித் ஷா, பொதுச்செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் செய்திதொடர்பாளர் மோகன் வைத்யா கூறுகையில் ‘‘ஆர்எஸ்எஸ்சில் இணைபவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2013ம் ஆண்டில் ஆன்லைன் மூலம் ஆர்எஸ்எஸ்சில் இணைந்தவர்கள் எண்ணிக்கை 28,000 ஆக இருந்தது. 2017ல் இந்த எண்ணிக்கை 1.25 லட்சமாக உயர்ந்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x