Last Updated : 27 Feb, 2018 05:05 PM

 

Published : 27 Feb 2018 05:05 PM
Last Updated : 27 Feb 2018 05:05 PM

நடிகை ஸ்ரீதேவி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு: வழக்கை முடித்துவிட்டதாக துபாய் போலீஸார் அறிவிப்பு

 

பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் எதிர்பாராதவிதமாக குளியல் தொட்டியில் விழுந்ததால் ஏற்பட்டுள்ளது என்று கூறி வழக்கின் விசாரணையை முடித்துக் கொள்வதாக துபாய் போலீஸார் அறிவித்தனர். இதையடுத்து, நடிகை ஸ்ரீதேவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக தனது கணவர் போனிகபூர், இளைய மகள், ஆகியோருடன் நடிகை ஸ்ரீதேவி(வயது 54) துபாய்க்கு கடந்த வாரம் சென்றார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவர் அங்கு மாரடைப்பால் மரணமடைந்தார் என முதலில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, துபாய் போலீஸார் நடத்திய விசாரணையில், திருமணம் முடிந்து போனிகபூர் மும்பை திரும்பிய நிலையில், நடிகை ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஜூமைரா எமிரட்ஸ் டவர் ஹோட்டலில் அறை எண் 2201ல் தங்கியுள்ளார். மும்பையில் இருந்து துபாய் திரும்பிய போனி கபூர், சனிக்கிழமை மாலை ஸ்ரீதேவியுடன் வெளியே செல்ல திட்டமிட்டு இருந்தார்.

அதன்பின் குளியல் அறைக்கு சென்ற ஸ்ரீதேவி நீண்ட நேரம் வராத காரணத்தால், அறைக்கதவை உடைத்து திறந்தனர். அப்போது, குளியல் அறை தொட்டியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். முதலில் மரடைப்பால் ஸ்ரீதேவி மரணமடைந்தார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், உடற்கூறு ஆய்வு, தடயவியல் விசாரணையின் முடிவில் ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லை, அவர் மது போதையில், குளியல் தொட்டியில் விழுந்து, மூச்சு விடமுடியாமல் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும், ஸ்ரீதேவி கணவர் போனி கபூரிடம் துபாய் புலன் விசாரணைப் பிரிவினர் இன்று காலையில் 3 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் துபாய் போலீஸார் ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை, அவரின் மரணம் குளியல்தொட்டியில் விழுந்ததால் ஏற்பட்டதுதான் எனத் தெரிவித்து வழக்கை முடித்துவிட்டனர்.

இது தொடர்பாக துபாய் போலீஸின் ஊடக அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய நடிகை ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க துபாய் போலீஸார் ஒப்புதல் அளித்துவிட்டனர். ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை அனைத்தும் முடிந்துவிட்டது, அனைத்துவிதமான தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டுவிட்டது,

இந்த வழக்கில் பின்பற்றப்படும் அனைத்து விதமான வழக்கமான முறைகளும் கடைபிடிக்கப்பட்டு முடிக்கப்பட்டன. தடயவியல் அறிக்கையின்படி, நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக குளியல் தொட்டியில் விழுந்து மரணமடைந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்த வழக்கை முடிக்கப்பட்டுவிட்டது. உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்தப்படுவதற்காக அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக துபாய் உள்ளூர் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x