Published : 23 Feb 2018 03:10 PM
Last Updated : 23 Feb 2018 03:10 PM

"பாஜகவுடன் சேர்ந்து என்னை விஷம் வைத்து கொல்ல நிதிஷ்குமார் சதி செய்கிறார்": தேஜஸ்வி புகார்

பாஜகவுடன் சேர்ந்து கொண்டு பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு தன்னை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி செய்கிறது என, அம்மாநில எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி அரசு எனக்கு எதிராக பல்வேறு சதிகளை செய்து வருகிறது. எனது தொலைபேசி தொடர்ந்து ஒட்டுக்கேட்கப்படுகிறது. எனது உணவில் விஷம் கலந்து என்னை கொலை செய்யவும் சதி செய்கின்றனர்.

அரசு விருந்தினர் மாளிகையில் எனக்கு அறை கொடுக்கவும் தடை செய்கின்றனர். நான் எங்கு செல்கிறேன், என்ன செய்கிறேன் என்பதை உளவு பார்க்கின்றனர். பாஜகவுடன் சேர்ந்து கொண்டு நிதிஷ்குமார் தவறான வழிகளைக் கடை பிடிக்கிறார்.

என்னை அரசியலை விட்டு துரத்தவும் திட்டமிடுகின்றனர். எங்கள் ஆதரவுடன் பதவிக்கு வந்த நிதிஷ் குமார் தற்போது பாஜகவுடன் சேர்ந்து கொண்டு எங்கள் கட்சிக்கு எதிராகவும், எங்கள் குடும்பத்திற்கு எதிராகவும் சதி செய்கிறார். என் குடும்பத்தினர் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எதிர்கட்சியை அழிக்க நினைக்கும் நிதிஷ்குமாரின் மோசமான செயலை கண்டு மக்கள் வேதனை அடைகின்றனர்’’ எனக் கூறினார்.

பிஹாரில் 2015-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியும், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றன. நிதிஷ்குமார் முதல்வரானார், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார். பின்னர் லாலு கட்சியுடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்துக் கொண்டார். புதிய கூட்டணி அரசில் பாஜக இடம் பிடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x