Published : 23 Feb 2018 07:58 AM
Last Updated : 23 Feb 2018 07:58 AM
தமிழகத்தை தொடர்ந்து காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா முடிவெடுத்துள்ளார்.
கர்நாடகா, தமிழகம் இடையே கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் 16-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய நீரின் அளவைவிட கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி நீர் ஒதுக்கியது. மேலும் மத்திய அரசு 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது.
தமிழகத்துக்கு நீரின் அளவை குறைத்ததற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழகத்தைப் போல கர்நாடகாவிலும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி காவிரி விவகாரத்தில் முக்கிய முடிவெடுக்க முதல்வர் சித்தராமையா திட்ட மிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கர்நாடக அரசு வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஆரம்பம் முதலே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகா எதிர்த்து வருகிறது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அது சித்தராமையாவின் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். விவசாயிகளின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டிய நிலை இருப்பதால், சித்தராமையா விரைவில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட முடிவெடுத்துள்ளார்” என்று தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT