Published : 22 Feb 2018 07:15 AM
Last Updated : 22 Feb 2018 07:15 AM

பிரிவினைவாத அமைப்புகளுக்கு என்றும் ஆதரவு கிடையாது: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி

இந்தியா மட்டுமின்றி உலகின் வேறு எந்தப் பகுதியில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் தனது நாடு என்றும் ஆதரவளிக்காது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி போராடி வரும் காலிஸ் தான் பிரிவினைவாத அமைப்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அவரது இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். இந்தியாவில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று அவர் வழிபட்டார்.

இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில், பஞ்சாப் உள்ளாட்சித் துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, கனடா ராணுவ அமைச்சர் ஹர் ஜித் சஜ்ஜன் ஆகியோர் உடனி ருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்கு கனடாவிலிருந்து செயல்படும் சில சக்திகள் ஆயுத, நிதியுதவி அளித்து வருவதாக ஜஸ்டின் ட்ரூடோவிடம் அமரீந்தர் சிங் தெரிவித்தார். மேலும், பஞ்சாபில் உள்ள இளைஞர்களையும், குழந்தைகளையும் தீவிரவாதத்தின் பாதையில் அந்த சக்திகள் அழைத்துச் செல்ல முயற்சிப்பதாகவும், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமரீந்தர் சிங் வலியுறுத்தினார்.

இதனை கவனமாகக் கேட்டறிந்த ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா மட்டுமின்றி உலகின் வேறு எந்தப் பகுதியில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் கனடா ஆதரவளிக்காது என திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், பிரிவினைவாத அமைப்புகளால் உருவாகும் ஆபத்தை தாம் உணர்ந்துள்ளதாகவும் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதையடுத்து, இந்தியா - கனடா இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து அமரீந்தர் சிங்கும், ஜஸ்டின் ட்ரூடோவும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட தாம் ஆர்வமுடன் இருப்பதாகவும் ட்ரூ டோ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x