Published : 21 Feb 2018 06:02 PM
Last Updated : 21 Feb 2018 06:02 PM
டெல்லி தலைமைச் செயலாளர் பிரகாஷ், ஆம் ஆத்மி கட்சி இடையிலான மோதல் முற்றி வருகிறது. டெல்லி அமைச்சர் இம்ரான் ஹூசைன் தன்னை தலைமைச் செயலகத்தில் சிலர் தாக்கியதாக ஆளுநர் அனில் பைஜாலிடம் இன்று புகார் அளித்தார்.
இதனால், தலைமைச்செயலாளரும், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும், அமைச்சரும் மாறிமாறி புகார் கொடுத்துள்ளனர்.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமானத்துல்லா கான், பிரகாஷ் ஜார்வால் தன்னை தாக்கியதாக தலைமைச் செயலாளர் அனுஷ் பிரகாஷ் ஆளுநரிடமும், போலீஸிடமும் புகார் அளித்து இருந்தார். இந்தபுகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பதிலுக்கு டெல்லி மாநில அரசின் சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் இம்ரான் ஹூசைன் தன்னை தலைமைச் செயலகத்தில் இருந்த ஒரு கும்பல் தாக்கிவிட்டதாக ஆளுநர் அனில் பைஜாலிடம் புகார் செய்தார்.
மேலும் அமைச்சர் இம்ரான் புகாரையடுத்து, போலீசர் வழக்குப்பதிவு செய்துள்ளனர், ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.
அந்த புகாரில், அமைச்சர் இம்ரான் ஹூசைனும், அவரின் தனிச் செயலாளரரும் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்கிழமை நண்பகல் லிப்ட் அருகே நின்று இருந்தனர். அப்போது, தலைமைச் செயலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென ஒரு கும்பல் திடீரென அமைச்சர், தனிச்செயலாளர் மீது தாக்குதல் நடத்தினர். இது அங்கிருந்தவர்களின் மொபைல் போன் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் ஆஷிஸ் கேட்டன் கூறுகையில், “ நானும் அமைச்சருடன் நின்று இருந்தேன். அப்போது அந்த கும்பல் என்னையும் தாக்கியது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பிஜேபி வாழ்க எனக் கூறிக்கொண்டு என்னைத் தாக்கினார்கள். இதை டெல்லி போலீசார் தடுக்க முயற்சிக்கவில்லை. தலைமைச் செயலகம் மிகவும் பாதுகாப்பு நிறைந்தபகுதி, அங்கு அமைச்சர் தாக்கப்படும்போது, போலீசார் யாரையும் தடுக்கவில்லை” என குற்றம்சாட்டினார்.
இந்த விஷயத்தில் அமைச்சர் ஹூசைனும், கேட்டனும் தனித்தனியாக போலீஸில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT