Published : 20 Feb 2018 08:44 AM
Last Updated : 20 Feb 2018 08:44 AM

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற தெலுங்கு தேசம் எம்பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டும்: எம்.எல்.ஏ. ரோஜா வலியுறுத்தல்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் அறிவித்தது போலவே, ஆளும்கட்சியான தெலுங்கு தேசம் எம்பிக்களும் ராஜினாமா செய்ய முன் வர வேண்டும் என்று நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா அழைப்பு விடுத்துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாநில மகளிர் அணி தலைவியும், நகரி சட்டப் பேரவை உறுப்பினருமான நடிகை ரோஜா நேற்று காலை திருமலையில் ஏழுமலையானைத் தரிசனம் செய்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மார்ச் 5-ம் தேதி முதல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் ஏப்ரல் 6-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதே பிரச்சினைக்காக தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முன் வர வேண்டும்.

ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் சிறப்பு அந்தஸ்துக்காக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படுமென அறிவித்தார். ஆனால் இதுவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சி பேதமின்றி அனைவரும் போராடினால் மட்டுமே சிறப்பு அந்தஸ்து சாத்தியமாகும்.

இவ்வாறு ரோஜா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x