Published : 15 Feb 2018 06:56 AM
Last Updated : 15 Feb 2018 06:56 AM
தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஊழல் விவகாரங்கள் தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குப்தா குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களின் வீடுகளில் அந்த நாட்டு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஜுமா பதவி வகித்து வருகிறார். ஆனால், 2009-ம் ஆண்டுக்கு முன்பு துணை அதிபராகப் பதவி வகித்த போது ராணுவத்துக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்தது, நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியது உட்பட பல்வேறு விஷயங்களில் ஜேக்கப் ஜுமா பெருமளவு ஊழல் புரிந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
எனவே, அவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் சிரில் ரமோபோஸா உத்தரவிட்டுள்ளார். அவர் பதவி விலக மறுப்பதால் நாடாளுமன்றத்தில் அதிபருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்ய ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது.
அதிபர் ஜேக்கப் ஜுமா ஆட்சியின்போது குப்தா குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு முறைகேடாக அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்பேரில் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள குப்தா குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அஜய், அதுல், ராஜேஷ் உள்ளிட்டோரின் வீடுகளில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது குப்தா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென் ஆப்பிரிக்காவின் புதிய அதிபராக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் சிரில் ரமோபோஸா விரைவில் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. அவரது உத்தரவின் பேரிலேயே சோதனை நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT