Published : 14 Feb 2018 06:43 PM
Last Updated : 14 Feb 2018 06:43 PM
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ 300 தீவிரவாதிகள் தயாராக இருப்பதாகவும், அவர்களை முறியடிக்கத் தயாராக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து சமீபத்தில் காஷ்மீருக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் ராணுவ முகாமில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து மேலும் பல தீவிரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவத்தின் வடக்கு பிரிவு தளபதி தேவராஜ் அன்பு கூறியதாவது:
‘‘காஷ்மீரில் தீவிரவாத செயல்களை அரங்கேற்ற பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து 300 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இதை தடுத்து நிறுத்த ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுமட்டுமின்றி சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் இந்திய பகுதிக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. நமது ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. நமது ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் 192 பாகிஸ்தான் வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்’’ எனக்கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT