Published : 14 Feb 2018 08:21 AM
Last Updated : 14 Feb 2018 08:21 AM
ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்களுக்கு ரூ.15,935 கோடியில் அதிநவீன துப்பாக்கிகள் வாங்க மத்திய அரசு நேற்று அனுமதி அளித்தது.
இந்திய பாதுகாப்புப் படைகளில் தற்போது ஏ.கே.47 மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஏஎஸ்ஏஎஸ் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மாற்றாக அதிநவீன துப்பாக்கிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசின் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கடந்த மாதம் முடிவு செய்தது.
7.4 லட்சம் துப்பாக்கிகள்
இந்த கவுன்சிலின் கூட்டம் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ராணுவம், கடற்படை, விமானப் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ரூ.15,935 கோடியில் அதிநவீன துப்பாக்கிகள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி 7.4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் வாங்கப்பட உள்ளன. இதற்கு ரூ.12,280 கோடி செலவாகும். இவை வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்.
இவை தவிர தொலைவில் இருந்து குறிதவறாமல் சுடும் திறன் கொண்ட 5,719 துப்பாக்கிகள் வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட உள்ளன. மேலும் ரூ.1,819 கோடியில் இலகுரக இயந்திர துப்பாக்கிகளும் வாங்கப்பட உள்ளன.
எல்லையில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர்களில் ஈடுபடும் வீரர்களுக்கு புதிய ரக துப்பாக்கிகள் வழங்கப்படும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்களுக்காக நீருக்கடியில் செலுத்தப்படும் ஏவுகணைகளை கண்டறியும் சாதனத்தை வாங்கவும் பொதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT