Published : 14 Feb 2018 07:33 AM
Last Updated : 14 Feb 2018 07:33 AM

சாகித்ய அகாடமி தலைவராக சந்திரசேகர கம்பாரா தேர்வு: முதல்வர் சித்தராமையா வாழ்த்து

மத்திய சாகித்ய அகாடமியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாரா வெற்றிப்பெற்றுள்ளார். அவருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன் னாள் முதல்வர் எடியூரப்பா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மத்திய சாகித்ய அகாடமி அமைப்பின் தலைவராக பொறுப்பு வகித்த இந்தி எழுத்தாளர் விஸ்வநாத் பிரசாத் திவாரியின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மராத்தி எழுத்தாளர் பால்சந்திரா நெமாடே, ஒரியா எழுத்தாளர் பிரதிபா ரே, கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாரா ஆகியோர் போட்டியிட்டனர். மூத்த எழுத்தாளர்களான மூவருமே நாட்டின் உயரிய இலக்கிய விருதான ‘ஞானபீடம்’ பெற்றவர் கள்.

இந்த தேர்தலில் 59 வாக்குகள் பெற்று கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாரா வெற்றி பெற்றார். மத்திய சாகித்ய அகாடமியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

கன்னட எழுத்தாளர்கள் வி.கே.கோகாக் (1983), யூ.ஆர். அனந்தமூர்த்தி ஆகியோரை தொடந்து 3-வது கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாரா சாகித்ய அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். பெல்காமை சேர்ந்த இவர் 10-க்கும் மேற்பட்ட நாவல்களையும், சிறுகதை, கட்டுரை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றிய சந்திர சேகர கம்பாரா சங்கீத நாடக அகாடமி விருது (1983), சாகித்ய அகாடமி விருது (1991), பத்மஸ்ரீ விருது (2001) ஞானபீட விருது (2011) உள்ளிட்ட உயரிய அங்கீகாரங்களை பெற்றுள்ளார் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x