Published : 13 Feb 2018 07:55 PM
Last Updated : 13 Feb 2018 07:55 PM

ஆதார் திட்டதை விமர்சித்தவர்களுக்கு அரசு அமைப்புகள் பல்வேறு விதங்களில் நெருக்கடி

ஆதார் எண் திட்டத்தில் பல்வேறு குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டி விமர்சித்தவர்களுக்கு அரசு அமைப்புகள் பல்வேறு நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஆதார் திட்டத்துக்காக தனி நபரின் முழு விவரங்கள் மற்றும் புகைப்படம், கை ரேகை, கண்ணின் கருவிழி உள்ளிட்டவையும் பதிவு செய்யப்படுகின்றன. இதுவரை 110 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் அரசின் மானியங்களைப் பெறுவது வரை அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இது தனி மனித அந்தரங்க உரிமையை மீறும் செயல் என ஆராய்ச்சியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குறை கூறி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், 500 ரூபாய் கொடுத்தால் ஆதார் தகவல்களை யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் 'தி டிரிபியூன்' பத்திரிகை கடந்த மாதம் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அந்த பத்திரிகை மீது ஆதார் திட்டத்தை நிர்வகிக்கும் தனித்துவ அடையாள ஆணையம் டெல்லி போலீஸில் (கணினி குற்றப் பிரிவு) புகார் செய்துள்ளது. இதன் அடிப்படையில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் ஆதார் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதால் தங்களை அரசு அமைப்புகள் கண்காணித்து வருவதாகவும் குற்ற வழக்குகள் பதிவு செய்வது உட்பட பல்வேறு வகையில் நெருக்கடி கொடுப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து ஆதார் திட்டம் குறித்த குறைகளை ஒரு அறிக்கை மூலம் சுட்டிக்காட்டிய பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் கூறும்போது, “ஆதார் குறித்து விமர்சனம் செய்த பிறகு போலீஸாரும் அரசு அதிகாரிகளும் எனக்கு பல்வேறு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்” என்றார்.

ஆதார் குறித்து புத்தம் வெளியிட்ட சமூக அறிவியலாளர் சமீர் கோச்சார் கூறும்போது, “டெல்லி போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 சட்ட விதிகளின் 14 பிரிவுகளை மீறியதாக என் மீது குற்றம்சாட்டி 3 முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x