Published : 12 Feb 2018 02:20 PM
Last Updated : 12 Feb 2018 02:20 PM
கேரளாவில் பெரும்பாலான அமைச்சர்கள் பங்கேற்காததால் அமைச்சரவைக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், அவர்கள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் தலைமைச் செயலகம் வர வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் இடதுசாரிக் கூட்டணி அரசு பதவியில் உள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. ஆளுநர் சதாசிவத்தின் ஒப்புதலுக்காக 10 மிக முக்கிய அவசரச்சட்டங்கள் அனுப்பபட வேண்டிய நிலையில், அந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.
கேரளாவில் முதல்வர் உட்பட மொத்தம் 19 பேர் அமைச்சர் பொறுப்பு வகித்து வருகின்றனர். பெரும்பான்மையான அமைச்சர்கள் பங்கேற்று முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறை அம்மாநிலத்தில் இருந்து வருகிறது. ஆனால், வெள்ளியன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு பினராயி விஜயன் உட்பட மொத்தம் 6 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
பெரும்பாலான அமைச்சர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் அமைச்சரவைக் கூட்டம் மற்றொரு நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சியான காங்கிரஸூம், பாஜகவும், கேரள அரசையும், இடதுசாரிக் கூட்டணி அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து, அமைச்சர்கள் மீது கடும் கோபம் கொண்டுள்ள பினராயி விஜயன் இன்று கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார். வாரத்தில் ஐந்து நாட்களுக்கு தலைமைச் செயலகத்திற்கு கட்டாயம் வரவேண்டும் எனக்கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறிள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT