Last Updated : 08 Feb, 2018 04:56 PM

 

Published : 08 Feb 2018 04:56 PM
Last Updated : 08 Feb 2018 04:56 PM

மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி வலியுறுத்தல்

மாநிலங்களவையில் தான் சிரித்ததைப் பார்த்து கிண்டல் செய்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று பேசினார். அப்போது, பிரதமர் பேச்சின் இடையே காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார். இதைக்கேட்ட அனைத்து எம்.பி.க்களும் அதிர்ச்சிஅடைந்தனர். மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும், ரேணுகா சவுத்ரியை கண்டித்து, 'ஏதாவது பிரச்சினை என்றால் மருத்துவரிடம் செல்லுங்கள்' என்றார்.

ரேணுகா சவுத்ரியின் சிரிப்பைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, ராமாயணா, மகாபாரதம் தொடருக்கு பின் இப்படி ஒரு சிரிப்பை கேட்கிறோம் என்று கூறினார். இதைக் கேட்டு அனைத்து எம்.பி.க்களும் சிரித்தனர். ஆனால், பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர்,  ரணுகா சவுத்ரியின் சிரிப்பு மகாபாரதம், ராமாயணத்தில் யாருடையது என்று குறிப்பிட்டு ட்வீட் செய்து இருந்தார். இது சமூக வலைதளஙகளில் பெரும் விவாதப்பொருளானது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்த ரேணுகா சவுத்ரி அதன்பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மாநிலங்களவையில், பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் என்னைப் பார்த்து கிண்டல் செய்து சத்தமாக சிரித்தனர். அவர்கள் இருவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவருவது குறித்து மாநிலங்களவைத் தலைவரிடம் பேசியுள்ளேன். இது குறித்து கட்சித் தலைமையிடம் ஆலோசித்துவிட்டு இறுதி முடிவு எடுப்பேன். இந்த விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துவிட்டேன். நான் இரு மகள்களுக்கு தாய், ஒருவரின் மனைவி. பிரதமர் மோடியின் செயல் பெண்ணின் மாண்பைக் குறைத்துவிட்டது'' எனத் தெரிவித்தார்.

எம்.பி. குமாரி சைலஜா கூறுகையில், ''அனைத்து காங்கிரஸ் பெண் எம்.பி.க்களிடமும் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்''  எனத் தெரிவித்தார்.

ஆனால், இந்தப் பிரச்சினையை இத்துடன் விட்டுவிட வேண்டும், காங்கிரஸ் கட்சி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவாக இருப்போம். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. திரிபாதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x