Published : 07 Feb 2018 04:04 PM
Last Updated : 07 Feb 2018 04:04 PM

மக்கள் எதிர்பார்ப்பது செயல்பாட்டை; சொற்பொழிவை அல்ல - பிரதமர் மோடிக்கு ராகுல் பதிலடி

 

பிரதமர் மோடியிடம் மக்கள் எதிர்பார்ப்பது ஆக்கபூர்வமான செயல்பாடுகளையே சொற்பொழிவை அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவையில் இன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, தமிழகம், ஆந்திரா, கேரளா என பல மாநிலங்களிலும் உள்ளூர் தலைவர்களை அவமானப்படுத்தி காங்கிரஸ் ஜனநாயக விரோத அரசியல் நடத்தியதாக கடுமையாக பேசினார். காங்கிரஸ் நாட்டை துண்டாடியதாகவும், ஒரு குடும்பத்திற்காகவே காங்கிரஸ் செயல்படுவதாகவும் கூறினார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘பிரதமர் மோடியிடம் இதுவரை 3 கேள்விகள் கேட்டோம். அவற்றில் ஒன்றிற்கு கூட பிரதமர் பதிலளிக்கவில்லை. ரபேல் ஒப்பந்த முறைகேடுகள் குறித்து அவர் பதில் சொல்லவில்லை. தேர்தல் பிரசாரத்தில் உரை நிகழ்த்துவது போல, பிரதமர் பேசியுள்ளார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ள பிரதமர் மக்களின் எந்த பிரச்னைகளையும் பற்றி பேசவில்லை. விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்சினையை பற்றி அவர் பேசவில்லை. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவது பற்றி அவர் கருத்து கூறவில்லை. நாங்கள் எழுப்பி வரும் எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்க விரும்பவில்லை.

ஊழல் குறித்து பேசும் பிரதமர், ரபேல் ஊழல் குறித்து ஏன் பேசவில்லை? அவர் நமது நாட்டின் பிரதமர் போல் பேசவில்லை. எதிர்க்கட்சி தலைவரை போல் பேசுகிறார். எதிர்கட்சிகளை விமர்சிப்பதை விட்டுவிட்டு நாட்டு மக்களுக்கு பயளனிக்கும் வகையில் அவர் செயல்பட வேண்டும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x