Published : 06 Feb 2018 04:02 PM
Last Updated : 06 Feb 2018 04:02 PM
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த 2 போலீஸார்களை சுட்டுக் கொன்று பாகிஸ்தான் தீவிரவாதியை லஷ்கர் இ தாய்பா தீவிரவாதிகள் விடுவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நவீத் ஜத் என்ற அபு ஹன்சலா என்பவரை காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். அவர் போலீஸாரின் பாதுகாப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், நவித் ஜீத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரிசிங் மருத்துவனைக்கு சிகிச்சைக்காக போலீஸார் இன்று காலையில் அழைத்துச் சென்றனர்.
அப்போது, போலீஸார் கண்காணிப்பு குறைந்த நேரத்தில் திடீரென அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ஒரு போலீஸ் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் சரிந்தார்.
அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தீவிரவாதி நவீத் ஜத்தை விடுவித்து தீவிரவாதிகள் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், படுகாயத்துடன் இருந்த மற்றொரு போலீசாரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகரில் பட்டப்பகலில் போலீஸாரை சுட்டு அவர்களின் பாதுகாப்பில் இருந்து தீவிரவாதியை தீவிரவாதிகள் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT