Published : 02 Feb 2018 11:54 AM
Last Updated : 02 Feb 2018 11:54 AM

ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜல்லிக்கட்டு போட்டிகளை நிரந்தமாக நடத்த ஏதுவாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா' தொடர்ந்த வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளி) உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை காரணமாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதை எதிர்த்து பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்த ஏதுவாக தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதுபோலவே கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் மாடுகளை வைத்து நடத்தும் போட்டிகளை தொடர்ந்து நடத்த ஏதுவாக சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

இதனை எதிர்த்து பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. விலங்குகள் மோசமாக நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், அதற்கு எதிராக மாநில அரசுகள் இதுபோன்ற சட்டங்களை கொண்டு வர முடியுமா? என நீதிபதிகள் ஏற்கெனவே கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய தேவை இருப்பதால் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டிய தேவை இருப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x