Published : 18 Jan 2018 05:52 PM
Last Updated : 18 Jan 2018 05:52 PM
லக்னோவில் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு மாணவி, ஒன்றாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவனை முதல்வர் யோகி ஆதித்யாத் பார்வையிட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரைட்லாண்ட் பள்ளியில் நேற்று முன்தினம் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை, அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி கழிவறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பள்ளி விடுமுறை விடுவதற்காக அந்த மாணவி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவன் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்த தகவல் பரவியதும் ஏராளமான பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்து, தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா இல்லாதததால், சம்பவத்தை உறுதி செய்ய முடியவில்லை.
இதனிடையே காயமடைந்த மாணவனை, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். மேலும், மாணவின் பெற்றோரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
முன்னதாக, ஹரியாணா மாநிலம், குருகிராமில், ரயான் சர்வதேச பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த பிரதியூமன் (7) என்ற சிறுவன் கடந்த ஆண்டு பள்ளிக் கழிப்பறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான். அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சீனியர் மாணவன், பள்ளி தேர்வை தள்ளி வைப்பதற்காக இந்த கொலை செய்ததாக தெரிய வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT