Published : 13 Jan 2018 09:56 AM
Last Updated : 13 Jan 2018 09:56 AM

சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம்தீவிரமான பிரச்சினை: உச்ச நீதிமன்றம் கருத்து

சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி பி.எச்.லோயாவின் மர்ம மரணம் ஒரு தீவிரமான பிரச்சினை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பி.எச்.லோயா, சக நீதிபதி ஒருவரின் மகள் திருமணத்துக்கு சென்றிருந்தபோது, நாக்பூரில் கடந்த 2014, டிசம்பர் 1-ம் தேதி இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டாலும் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.எம்.சந்தனகவுடர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதால் உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது” என மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே எதிர்ப்பு தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வரீந்தர் குமார் சர்மா, “நீதிபதி மர்மான முறையில் இறந்த சம்பவத்தை உச்ச நீதிமன்றம் விசாரிப்பது அவசியம்” என வலியுறுத்தினார். இதையடுத்து இது தீவிரமான பிரச்சினை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மகாராஷ்டிர அரசு வரும் 15-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் நீதிபதி பி.எச்.லோயாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய மகாராஷ்டிர அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர். வழக்கு 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x