Published : 12 Jan 2018 12:37 PM
Last Updated : 12 Jan 2018 12:37 PM

உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை: 4 நீதிபதிகள் கூட்டாக பேட்டி- இந்திய வரலாற்றில் முதன்முறை

உச்ச நீதிமன்ற  நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை என மூத்த நீதிபதிகள் 4 பேர் இன்று கூட்டாக பேட்டியளித்துள்ளது பெரும் பரரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நான்கு பேர் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

"இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கவலையை மக்களுக்கு கூற விரும்பியதால் செய்தியாளர்களை சந்தித்தோம்.

உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை சில காலத்திற்கு முன்னதாக நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இதுதொடர்பாக கடிதம் எழுதினோம். ஆனால் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நாட்டு மக்களுக்கு சில விவரங்களை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட்டுமின்றி நாடே பாதிக்கப்படும்" எனக்கூறினார்.

இதன் பின், தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நீதிபதிகள ‘‘இதை நாட்டின் முடிவுக்கு விட்டு விடுகிறோம்’’ எனக்கூறினர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை வெளியிடுவதாகவும் அவர்கள் கூறினர். அந்த கடிதம் வெளியான பிறகே, நீதிபதிகளின் பேட்டியின் விவரங்கள் முழுமையாக வெளியாகும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x