Published : 10 Jan 2018 02:45 PM
Last Updated : 10 Jan 2018 02:45 PM
கன்னட எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை, ஓய்வு பெற்ற நீதிபதி வழிகாட்டுதலுடன், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி (77) 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். மூடநம்பிக்கைக்கு எதிராக பேசிவந்த அவர், கொல்லப்பட்டது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதே பாணியில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனவே இந்த மூன்று கொலைகளின் பின்னணியில் ஒரே குழுவினர் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் கல்புர்கியின் மனைவி உமாதேவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘கல்புர்கியின் கொலை குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை. கல்புர்கி கொலை குறித்து கர்நாடக அரசு மூன்று ஆண்டுகளாக விசாரணை நடத்தவரும் நிலையில், வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சிபிசிஐடி குற்றவாளிகளாக கருதும் யாரையும் கைது செய்யவில்லை. இந்த கொலையில் தொடர்புடையவர்களுக்கு, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோரின் கொலையிலும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த வழக்கில் கர்நாடகா தவிர மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில போலீஸாரும் விசாரணை நடத்த வேண்டிய தேவை உள்ளது.
எனவே, இந்த வழக்கை, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியின் வழிகாட்டுதலுடன் சிறப்பு புலனாய்வு குழுவின் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசு, தேசிய புலனாய்வு அமைப்பு, சிபிஐ மற்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா மாநில அரசுகளுக்கும் ஆறு வாரகாலத்திற்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT