Published : 06 Jan 2018 10:02 AM
Last Updated : 06 Jan 2018 10:02 AM

முத்தலாக் தடை மசோதா நிறைவேறவில்லை: நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தது

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாத நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்றுடன் முடிந்தது.

கடந்த டிசம்பர் 15-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. இதில், மிகவும் முக்கியமான முத்தலாக் தடை மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மக்களவையில் நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை மாநிலங்களவை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், இந்தக் கோரிக்கையை அரசு ஏற்காததால் அமளி நிலவியது. மாநிலங்களவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பின்றி நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில்,இந்த கூட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய இந்த மசோதாவுக்கு பட்ஜெட் கூட்டத் தொடரில் மாநிலங்களவையின் ஒப்புதலை பெற அரசு முயற்சிக்கும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

குளிர்கால கூட்டத் தொடரின்போது 13 அமர்வுகள் நடைபெற்றன. இதில் முத்தலாக் தடை மசோதா உட்பட 13 மசோதாக்கள் மக்களவையிலும் 9 மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன. இரு அவைகளிலும் 17 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த வகையில் இந்த கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக இருந்தது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி. அதேநேரம், மிக முக்கியமான முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியே காரணம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது.

எனவே, பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளித்து, முத்தலாக் தடை மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

34 மணி நேரம் வீண்

இதுகுறித்து மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, “இந்த கூட்டத் தொடரின்போது மாநிலங்களவை 41 மணி நேரம் செயல்பட்டுள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சியினரின் அமளியால் 34 மணி நேரம் வீணாகி உள்ளது. உறுப்பினர்கள் தங்கள் பொறுப்பை உணராமல் அவையின் நேரத்தை வீணடித்திருப்பது கவலை அளிக்கிறது’’ என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x