Published : 04 Jan 2018 09:49 AM
Last Updated : 04 Jan 2018 09:49 AM
இந்திய பாரம்பரியச் சின்னமான தாஜ்மஹாலை பார்வையிட நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உலக அதிசயங்களுள் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலை, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
அதிகபடியான சுற்றுலாப் பயணிகளின் வருகையின் காரணமாக, தாஜ்மஹாலின் அழகையும், அதன் வெண்மை நிறத்தையும் பராமரிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. தாஜ்மஹாலை பராமரிப்பதற்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்டிருக்கும் தொல்லியல் ஆராய்ச்சித் துறையினரும், இந்த தகவலை மத்திய அரசிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் மத்திய அரசு உயரதிகாரிகளுடன் தொல்லியல் ஆராய்ச்சி துறையினரும், தாஜ்மஹாலை பாதுகாக்கும் சிஐஎஸ்எப் அதிகாரிகளும் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். அப்போது, தாஜ்மஹாலை பார்வையிட நாளொன்றுக்கு 40 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வரும் 20-ம் தேதியிலிருந்து இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்தக் கட்டுப்பாடு, வெளிநாட்டு பயணிகளுக்கு பொருந்தாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT