Published : 17 Dec 2017 09:08 PM
Last Updated : 17 Dec 2017 09:08 PM
கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளை அடித்த ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராம் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது மனைவியான மஞ்சு இன்று மாலை ஜோத்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் பாலி மாவட்டம் ஜெய்தாரனில் உள்ள ராமாவாஸ் கிராமத்தில் கடந்த செவ்வாய் அன்று நாதுராம் சுற்றி வளைக்கப்பட்டார். இவரைப் பிடிக்க மதுரவாயல் ஆய்வாளர் பெரியபாண்டியன் தலைமையில் சென்ற படையினருடன் மோதல் ஏற்பட்டது. இதில், பெரியபாண்டியன் மீது எதிர்பாராமல் பாய்ந்த குண்டு காரணமாக அவர் பலியானார். இந்த சம்பவம் மீது ராஜஸ்தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக நாதுராமை பிடிப்பதில் ராஜஸ்தான் போலீஸார் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் போலீஸாரின் ஆறு படையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். நாதுராம் தம் மனைவியுடன் ஜோத்பூரின் மாலாவாஸ் கிராமத்தில் ஒளிந்திருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில் இன்று மாலை ராஜஸ்தான் போலீஸ் படை சுற்றி வளைத்ததில் நாதுராமின் மனைவி மஞ்சு கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இருந்த நாதுராம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
கைது செய்யப்பட்ட மஞ்சுவை நாளை ஜெய்தாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இவர் சென்னையில் நாதுராம் தங்கியிருந்த போது அவருடன் இருந்துள்ளார். சென்னையில் கொள்ளையடிக்கும் நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை மஞ்சுவிடம் ராஜஸ்தானுக்கு நாதுராம் கொடுத்து அனுப்பும் வழக்கம். மஞ்சு இதை எடுத்துச் சென்று ராஜஸ்தானில் தன் உறவினர்கள் பலரிடம் கொடுத்து மறைத்து வைத்துள்ளார். இதனால், மஞ்சு மூலமாக தமிழகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவர் மூலமாக, நாதுராமும் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT