Published : 17 Dec 2017 11:33 AM
Last Updated : 17 Dec 2017 11:33 AM

தீவிரவாதத்தை ஒழிப்பதால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கருத்து

காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிப்பதால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலம் பனாஜியில் இந்தியா பவுண்டேஷன் சார்பில் ‘இந்தியா ஐடியாஸ் கான்கிளேவ் 2017’ நடைபெற்றது. இதில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி பேசியதாவது:

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் அமைதியான சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர். தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருவதாக ராணுவமும் இதர பாதுகாப்புப் படையினரும் கருதுகின்றனர்.

ஆனால், தீவிரவாதத்தை ஒழிப்பது மட்டுமே இங்குள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. 200 தீவிரவாதிகளை ஒழித்தால் வேறு 200 தீவிரவாதிகள் உருவாவார்கள். எனவே, தீவிரவாதம் மீதான கண்ணோட்டம் மாற வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது மேற்கொண்ட நடவடிக்கையை தொடர வேண்டும்.

குறிப்பாக, அனைத்து தரப்பினரையும் (பிரிவினைவாதிகள்) அரசியலில் ஈடுபடுத்தும் வகையிலான ஒருங்கிணைப்பு கொள்கை தேவைப்படுகிறது. இதனால் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது பொருள் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தீவிரவாத ஒழிப்பு தொடரும்

காஷ்மீர் மாநில டிஜிபி எஸ்.பி. வைத் ஜம்முவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழிக்கும் நோக்கில், ஆபரேஷன் ஆல்-அவுட் என்ற அதிரடி நடவடிக்கையை கடந்த ஆண்டு தொடங்கினோம். இந்த நடவடிக்கையின் கீழ், கடந்த ஓராண்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர், பல்வேறு தீவிரவாத இயக்கங்களின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் ஆவர். இதன் விளைவாக, மாநிலத்தில் இப்போது பெருமளவு அமைதி திரும்பியுள்ளது.

ஆனாலும் காஷ்மீரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இதனால், சில தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே, காஷ்மீரில் அமைதி திரும்பும் வரை, தீவிரவாதிகளை அழிக் கும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இவ்வாறு டிஜிபி எஸ்.பி. வைத் தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x