Published : 17 Dec 2017 11:30 AM
Last Updated : 17 Dec 2017 11:30 AM

உ.பி. முசாபர் நகர் கலவர வழக்கு: அமைச்சர், எம்எல்ஏ.க்களுக்கு எதிராக கைது உத்தரவு

முசாபர்நகர் கலவரம் தொடர் பான வழக்கில் அமைச்சர் சுரேஷ் ராணா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. இதில் 62 பேர் உயிரிழந்தனர். 93 பேர் காயமடைந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் உத்தரபிரதேச சர்க்கரை ஆலை மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுரேஷ் ராணா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏ-க்களை விசாரிக்க மாநில அரசிடம் எஸ்ஐடி அதிகாரிகள் அனுமதி கோரி வந்தனர். இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியது.

இந்தத் தகவலை முசாபர்நகர் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எஸ்ஐடி அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர் சுரேஷ் ராணா, முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான், பாஜக எம்எல்ஏக்கள் சங்கீத் சோம், உமேஷ் நாயக் உள்ளிட்டோருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவை நீதிபதி மது குப்தா பிறப்பித்தார். மேற்குறிப்பிட்ட அனைவரையும் வரும் ஜனவரி 19-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் எஸ்ஐடி அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x