Published : 05 Dec 2017 03:24 PM
Last Updated : 05 Dec 2017 03:24 PM

2018 பிப்ரவரியில் இறுதி விசாரணை அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

அயோத்தி வழக்கின் இறுதி விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு பல்வேறு தரப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 13 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.எஸ்.நஜீப் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சன்னி வக்பு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கில் அரசியல் சிக்கல்கள் உள்ளன. ஒரு கட்சியின் வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே விசாரணையில் அவசரம் காட்டக்கூடாது. வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த மக்களவை தேர்தலுக்குப் பிறகு ஒத்தி வைக்க வேண்டும்” என்று கபில் சிபல் வாதாடினார்.

ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, “பல்வேறு வழக்குகள் அரசியல் பின்னணி கொண்டவை. அதற்காக அந்த வழக்குகளின் விசாரணை ஒத்திவைக்கப்படவில்லை. அயோத்தி வழக்கு விசாரணையை 2019 ஜூலைக்கு பிறகு ஒத்திவைக்க கோருவது ஏற்கத்தக்கது அல்ல” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: வழக்கில் தொடர்புடைய அனைத்து வழக்கறிஞர்களும் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும். கடந்த ஆகஸ்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இறுதி விசாரணையை ஜனவரியில் தொடங்க வேண்டும் என்று எல்லோருமே வலியுறுத்தினர். இப்போது விசாரணையை தள்ளிவைக்க கோருவது அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை 2018 பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்து மகா சபா வழக்கறிஞர் ஹரி குமார் ஜெயின், உ.பி. ஷியா வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x