Last Updated : 05 Dec, 2017 09:11 AM

 

Published : 05 Dec 2017 09:11 AM
Last Updated : 05 Dec 2017 09:11 AM

அயோத்தியில் ராமர் பிறந்த இடம் யாருக்கு சொந்தம்? - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடக்கம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமர் பிறந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று முடிவு செய்வது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்குகிறது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமர் பிறந்த இடம் 2.77 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த நிலத்திற்கு பல்வேறு தரப்பில் சொந்தம் கொண்டாடியதால் வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தனது தீர்ப்பை அளித்தது. நீதிபதிகள் 2:1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் அளித்த அந்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய நிலத்தை சுனி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய மூன்று அமைப்புகளும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 13-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இம்மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் நிலம் யாருக்குச் சொந்தம் என்று முடிவெடுக்க வசதியாக உருது, இந்தி உள்ளிட்ட 8 மொழிகளில் உள்ள பல்வேறு ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரும்படி உத்தரபிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஷியா மத்திய வக்பு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலை கட்டிக் கொள்ளலாம். பாபர் மசூதியை நியாயமான தூரத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கட்டிக் கொள்ள சம்மதிக்கிறோம்’ என்று தெரிவித்தது. இதற்கு சுனி மத்திய வக்பு வாரியம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘பாபர் மசூதி இடத்தில் யாருக்கு உரிமை உண்டு என்ற வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டு 1946-ம் ஆண்டு தங்களுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் தரப்பு கருத்தை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அந்த அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆவணங்கள் அனைத்தையும் உத்தரபிரதேச மாநில அரசு மொழிபெயர்த்து தாக்கல் செய்துவிட்டது. இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் அயோத்தி ராமர் பிறந்த இடம் தொடர்பான நில உரிமை வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை தொடங்க இருப்பது மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x