Published : 04 Dec 2017 09:17 AM
Last Updated : 04 Dec 2017 09:17 AM

அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த ஆண்டு தீபாவளி: சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை

அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகை அயோத்தியில் புதிதாக கட்டப்படும் ராமர் கோயிலில் கொண்டாடப்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கும். அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் ராமர் கோயில் தயாராகிவிடும். சுவாமி நாராயண் கோயிலைப்போல, உட்கட்டமைப்பு இணைப்பு பணிகளை செய்தால் போதும். புதிதாக கட்டப்படும் ராமர் கோயிலில் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்.

ராமர் கோயில் கட்டுவதற்கு புதிதாக சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே நரசிம்மராவ் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பிரச்சினைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் இருந்தது நிரூபிக்கப்பட்டால் அந்த நிலம் இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு ராமர் கோயில் இருந்தது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் வெற்றி பெறுவோம் என்று முழு நம்பிக்கை உள்ளது. ராமர் கோயில் விவகாரத்தில் சன்னி வக்ப் வாரியம் மீண்டும் மறுத்து வாதாடுவதற்கு எதுவும் இல்லை. பிரச்சினைக்குரிய நிலத்தில் வழிபாடு செய்வது இந்துக்களின் உரிமை என்று கூடுதல் மனு தாக்கல் செய்தேன். சொத்தின் மீதுதான் அவர்கள் ஆர்வமாக உள்ளனர். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x