Published : 04 Dec 2017 09:10 AM
Last Updated : 04 Dec 2017 09:10 AM
ஆயிரக்கணக்கானவர்களை பலி வாங்கிய போபால் விஷ வாயு கசிவு விபத்தின் 33-வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனின் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதில் கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி விஷ வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் ஆயிரக் கணக்கானோர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இதுதவிர, லட்சக் கணக்கானோர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இன்னமும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆனால், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமோ இழப்பீடோ வழங்கப்படவில்லை. இதனால் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விபத்தின் 33-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பர்கத்துல்லா பவனில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இதில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
மேலும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காலை 6 மணி முதலே ஆளுநர் மாளிகைக்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்த விவகாரத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
மற்றொரு பிரிவினர் யூனியன் கார்பைடு தொழிற்சாலை வரை பேரணியாக சென்றனர். அப்போது தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். - ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT