Last Updated : 29 Nov, 2017 09:34 AM

 

Published : 29 Nov 2017 09:34 AM
Last Updated : 29 Nov 2017 09:34 AM

பெண் குழந்தை பிறந்தது உண்மைதான்: சொல்கிறார் ஜெ., உறவினர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என பெங்களூருவில் இருக்கும் அவரது உறவினர் லலிதா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா (37), ‘நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள். என்னை அவரது மகளாக அங்கீகரித்து, ரத்த வாரிசாக அறிவிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அம்ருதா, ‘‘கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி ஜெயலலிதாவின் மகளாக நான் பெங்களூருவில் பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதா தனக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் சிறுவயதிலே என்னை பார்த்தசாரதி - ஷைலஜா தம்பதிக்கு தத்து கொடுத்துவிட்டார். எனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடைசி வரை என்னை மகளாக அறிவிக்கவில்லை''என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரசவம் பார்த்ததாக சொல்லப்படும் ஜெயலட்சுமியின் உறவினர் மகள் லலிதா, ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனது அம்மாவின் அண்ணன் மகள். ஜெயலலிதாவின் குடும்பத்தார் எங்களுக்கு குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதால், சிறுவயதில் இருந்தே பல விஷயங்கள் எங்களுக்கு தெரியும். ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது, அவருக்கு ஒருவருடன் தொடர்பு இருந்தது. அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் எனவும் தெரிகிறது.

இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஜெயலலிதாவின் பேறுகாலத்துக்கு அருகில் இருந்து உதவியவர் என் பெரியம்மா ஜெயலட்சுமிதான். இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என ஜெயலலிதா என் பெரியம்மா ஜெயலட்சுமியிடம் சத்தியம் வாங்கி கொண்டார். இதனால் என் பெரியம்மா இதனை வெளியே சொல்லவில்லை. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும்.

ஜெயலலிதா தனக்கு பிறந்த பெண் குழந்தையை அவரது நெருங்கிய உறவினரிடம் வளர்க்க கொடுத்தார். அந்த குழந்தை அம்ருதாவா எனக்கு தெரியாது. சந்தேகம் இருந்தால் டிஎன்ஏ சோதனை செய்து பார்க்கலாம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அம்ருதா என்னை வந்து சந்தித்தார். ஜெயலலிதாவின் மகள் என சொல்லும் அவர் என்னை அத்தை என்று அழைக்கிறார். அவருக்கு ஜெயலலிதாவின் சொத்துகள் மீது ஆசை இருப்பதாக தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மைதான். அவரது தாயார் சந்தியா இறந்ததால், மனிதாபிமான அடிப்படையில் ஜெயலட்சுமி அவரது பிரசவத்துக்கு உதவி இருக்கிறார்கள்'' என்றார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஜெயலலிதாவின் உறவினர் லலிதா தெரிவித்துள்ள தகவல், மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x