Published : 23 Nov 2017 09:19 AM
Last Updated : 23 Nov 2017 09:19 AM

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது சிபிஐ

ஊழல் வழக்கிலிருந்து கேரள முதல்வர் பினராயி விஜயனை அம்மாநில உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஈ.கே.நாயனார் தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சி செய்தது. இந்த அரசில் மின்துறை அமைச்சராக பினராயி விஜயன் பதவி வகித்தார். இந்நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் 3 முக்கிய நீர்மின் நிலையங்களை சீரமைக்க ‘எஸ்என்சி லவலின்’ என்ற கனடா நாட்டு நிறுவனத்துக்கு ரூ.375 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

இடதுசாரி அரசை தொடர்ந்து 2001-ல் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றது. அப்போது ‘எஸ்என்சி லவலின்’ ஒப்பந்த நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கனடா நாட்டு நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் தரப்பட்டதாகவும் இதனால் அரசுக்கு பெருமளவு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக பினராயி விஜயன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் பினராயி விஜயன் குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என அவரை வழக்கில் இருந்து விசாரணை நீதிமன்றம் கடந்த 2013-ல் விடுதலை செய்தது. இத்தீர்ப்பை கடந்த 3 மாதங்களுக்கு முன் கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான ஆவணங்களை சட்ட அமைச்சகம் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள் ளது.

இதுகுறித்து இடதுசாரி கட்சி தலைவர்கள் கூறும்போது, ‘‘அரசியலில் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு சிபிஐ அதிகாரிகளை ஏவி விடுவது பாஜக.வின் வழக்கமான செயல்தான். பொய் வழக்குகளை போட்டு எதிர்க்கட்சிகளை மிரட்டும் பழைய பாணியை இப்போதும் பாஜக தொடர்கிறது. இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம்’’ என்று குற்றம் சாட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x