Published : 21 Nov 2017 09:50 AM
Last Updated : 21 Nov 2017 09:50 AM
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
தமிழகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா உட்பட 20 மாநிலங்களைச் சேர்ந்த 108 விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் நேற்று குவிந்தனர். அவர்கள் ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்ற சாலை வரை பேரணியாக சென்றனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவரும் ஸ்வராஜ் அபியான் அமைப்பின் உறுப்பினருமான யோகேந்திர யாதவ் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். சில நேரங்களில் போதிய விளைச்சல் கிடைப்பதில்லை. வேறு சில நேரங்களில் நல்ல விளைச்சல் இருந்தும் போதிய விலை கிடைப்பது இல்லை.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயிகளின் பிரச்சினையை தீர்ப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் தனது வாக்குறுதியை காப்பாற்ற வில்லை. விவசாயிகளின் நலன்களைக் காக்க சுவாமிநாதன் கமிட்டி சில ஆலோசனைகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த பரிந்துரைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இனியாவது மத்திய அரசு விழித்து விவசாயிகளின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தின்போது, நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT